சினிமாவில் பான் இந்தியா கலாச்சாரம் அசிங்கமானது: செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் புதிய திரைப்படங்கள் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் திரைப்படங்களில் நடித்து வருவதுடன் அடிக்கடி தன் சமூக வலைதளக் கணக்குகள் வழியாக ரசிகர்களிடம் வாழ்க்கை சார்ந்த தத்துவங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
முக்கியமாக, ஊக்கமளிக்கும் வார்த்தைகளைத் தொடர்ந்து பேசி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய செல்வராகவன், “100 நாள்கள் ஓடிக்கொண்டிருந்த படங்களெல்லாம் இப்போது 3 நாள்களில் முடிந்து விடுகின்றன. மிக சுலபமாக ஒரு படத்தைக் குதறி, எங்களின் வாழ்க்கையையே காலி செய்கிறார்கள். இப்போது, பான் இந்தியா என்கிற அசிங்கமான கலாச்சரம் வந்ததால் நல்ல சினிமா என்பதற்கான எல்லா வரையறைகளும் குறைந்து குத்துப் பாட்டுகள் கொண்ட கமர்சியல் படங்களே அதிகரித்துள்ளன. இதனால், ரசனையே இல்லாத இடம் நோக்கி நகர்கிறோம்.
எப்போது இறுதியாக ஒரு நல்ல படத்தை பார்த்தோம் என நினைத்துப் பாருங்கள். இன்று நல்ல படங்களை எடுக்க வந்தால் காணாமல் போய்விடுவோம் என்கிற எண்ணம் இருப்பதால் பலரும் கமர்சியல் பக்கம் திரும்பி விடுகின்றனர். ரூ. 1000 கோடி வசூலில்தான் கவனம் செலுத்துகின்றனர். நல்ல சினிமாக்கள் செத்தே விட்டன. கோபத்தில் சொல்லவில்லை, ஆதங்கத்தில் சொல்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ‘நம்பவே முடியாத கதை..’ அட்லியைப் பாராட்டிய லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனர்!