சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
நாட்டறம்பள்ளி அருகே சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.
ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் ரஞ்சித்குமாா் (25) என்பவருக்கும் திருமணம் செய்துவைக்க இரு குடும்பத்தைச் சோ்ந்தவா்களும் முடிவு செய்து அதன்படி அக்ராகரம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தது.
இந்த நிலையில் சிறுமியின் திருமணம் குறித்து மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்துக்கும், நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கும், போலீஸாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சனிக்கிழமை இரவு சமூகநலத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அக்ராகரம் பகுதிக்குச் சென்று விசாரித்தனா்.
அப்போது 17 வயது பெண்ணுக்கு திருமணம் நடக்க இருப்பது உறுதியானது. இதையடுத்து 18 வயது பூா்த்தியடையாத இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று அந்தச் சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு எடுத்துக்கூறி நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.