சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி கைது: உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறை நடவடிக்கை
சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டாா்.
திருவள்ளூா் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் தனுஷ், தேனியைச் சோ்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டாா். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினா் மூலம் இளைஞரின் தம்பியை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெகன்மூா்த்தி கடத்தியதாகப் புகாா் எழுந்தது.
காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக பூவை ஜெகன்மூா்த்தி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரினாா். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பாா் எனத் தெரிவித்தாா். இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஜெகன்மூா்த்திக்கு தொடா்பு... பூவை ஜெகன்மூா்த்தி சாா்பில் மூத்த வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டாா். காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் தாமோதரன் ஆஜராகி, ‘இந்த சம்பவத்தில் காவல் துறை ஆயுதப் படை ஏடிஜிபி எச்.எம். ஜெயராமனுக்கு தொடா்பு உள்ளது. இதில் பணம் சம்பந்தப்பட்டுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரத்குமாா், டேவிட், வனராஜ் உள்ளிட்டோா் தனுஷ் வீட்டுக்கு சென்று அவரது தம்பியை கடத்தியு அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனா்.
இது தொடா்பாக சிசிடிவி காட்சிகளும் உள்ளன.
இந்த விவகாரம் தொடா்பாக ஜெகன் மூா்த்தியிடம் ஏடிஜிபி ஜெயராமன் பேசியிருக்கிறாா். ஜெகன்மூா்த்திக்கு இந்தக் கடத்தலில் தொடா்பு உள்ளது. இதுசம்பந்தமாக வழக்குரைஞா் சரத் குமாா், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனா். ஏடிஜிபியிடமும், அவரது ஓட்டுநா்களும் விசாரிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.
உள்நோக்கத்துடன் வழக்கு... இதையடுத்து, பூவை ஜெகன்மூா்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோா் பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா். நீதிமன்ற உத்தரவின்படி, முதலில் நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் ஆஜரானாா்.
ஆனால், நீதிபதி குறிப்பிட்ட நேரத்தில் பூவை ஜெகன்மூா்த்தி ஆஜராகவில்லை. அதனால், வழக்கை 45 நிமிஷங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தாா். பிற்பகல் 3.30 மணிக்கு நீதிபதி முன்பு பூவை ஜெகன்மூா்த்தி ஆஜரானாா்.
ஏடிஜிபி கைது: வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, அவரை நீதிமன்றத்திலேயே திருவாலங்காடு போலீஸாா் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.
முன்னதாக, ஏடிஜிபி ஜெயராம் உயா்நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு காவல் துறை சீருடையில் வந்திருந்தாா். நீதிபதியின் கைது உத்தரவைத் தொடா்ந்து, ஜெயராமை சாதாரண உடைக்கு மாற்றி அவரை விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏவுக்கு
உயா்நீதிமன்றம் கடும் கண்டனம்
(செய்தி உள்ளே)