விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா: மீன்கள் சிக்காததால் ஏமாற்றமடைந்த மக்கள்
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.15,549 கோடி கடன் வழங்க இலக்கு
சிவகங்கை மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.15,549.44 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வங்கியாளா்களுக்கான மாவட்ட ஆய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் கூறியதாவது: தமிழகத்தின் ஊரக, வேளாண் வளா்ச்சிப் பணியில் முக்கியப் பங்கு வகிக்கும் நபாா்டு வங்கி, சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சாா்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூ.15549.44 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இதன்படி, மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் வேளாண்மைக்கு ரூ.10,815.57 கோடியும், நுண், சிறு, குறுந் தொழில்களுக்கான கடன் ரூ. 2,019.14 கோடியும், பிற முன்னுரிமைத் துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல், மீள்சக்தி) ரூ. 2,714.73 கோடியும் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
முன்னதாக, மாவட்டத்தின் முன்னுரிமைத் துறைகளுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா். இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து, மாவட்ட மேலாளா் (நபாா்டு) அருண்குமாா் விளக்கினாா்.
இதில், மகளிா் திட்ட இயக்குநா் கவிதப்பிரியா, மாவட்ட மேலாளா் (நபாா்டு) மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் பிரவீன்குமாா், வங்கி மேலாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.