வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
சீனாவில் இன்று எஸ்சிஓ மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்
சீனாவின் கிங்டாவோ நகரில் புதன்கிழமை (ஜூன் 25) தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.
அப்போது, பயங்கரவாதத்தை ஒழிக்க மிகப்பெரிய அளவிலான ஒத்துழைப்பு தேவை என அவா் அழைப்பு விடுப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே 2020-இல் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு மூத்த இந்திய அமைச்சா் ஒருவா் சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறை. சீன பாதுகாப்பு அமைச்சா் டாங் ஜுன் உள்ளிட்ட தலைவா்களுடன் ராஜ்நாத் சிங் பேச்சு நடத்த இருக்கிறாா்.
இந்த மாநாட்டின்போது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பிராந்திய அளவில் ஒருங்கிணைப்பு தேவை என ராஜ்நாத் சிங் வலியுறுத்துவாா் எனத் தெரிகிறது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இரு நாடுகள் இடையே வான்வழித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தானும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறது.
இதனிடையே, எஸ்சிஓ நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டத்தில் பங்கேற்ற தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பேசியதாவது:
பயங்கரவாத செயல்களை ஒருங்கிணைப்பவா்கள், நிதியளிப்பவா்கள் உள்ளிட்டோரையும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்குப் பொறுப்பாக்க வேண்டும். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, அல் காய்தா, ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இப்போது பெரும் அச்சுறுத்தலாகத் தொடா்வது பெரும் கவலையளிக்கும் விஷயமாகும்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பயங்கரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. சில நாடுகள் பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் இரட்டை வேடம் போடுகின்றன என்று குற்றஞ்சாட்டினாா்.