TVK: "இன்னும் ஒரே மாசத்துல தமிழ்நாடு முழுக்க விஜய் செல்வார்" - சுற்றுப்பயணத்தை உ...
6 சதங்கள் அடித்தும் தோல்வியில் முடிந்த ரிஷப்பின் சோக வரலாறு!
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இந்தியாவுக்கு வெளியே 6 சதங்கள் விளாசியிருந்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கு முன்னாள் ஜாம்பவான்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய சின்ன சின்ன தவறுகளால் வெற்றியை நழுவவிட்டது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவித்த நிலையில், கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் என மூவர் சதம் விளாசினர். இரண்டாவது இன்னிங்ஸிலும் ரிஷப் பந்த் சதம் விளாசி சாதனை படைத்தார்.
இருப்பினும், இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் விளையாடி 371 ரன்களை சேஸ் செய்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையும் படைத்தனர். அசத்தலாக விளையாடிய பென் டக்கெட் சதமும், ஜோ ரூட் அரைசதமும் விளாசினர்.

இந்திய அணித் தரப்பில் ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸ்கள் முறையே 134 மற்றும் 118 ரன்கள் குவித்திருந்தார். இருப்பினும், அவரது உழைப்பிற்கு பலன் கிடைக்காமல் போனது.
இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் விளாசியவர்களில் டிராவிட்டுக்கு(6 சதங்கள்) அடுத்த இடத்தை, சச்சின், வெர்சங்கர்(தலா 4 சதங்கள்) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ரிஷப் பந்த்.
ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 8 சதங்கள் விளாசியுள்ளார். இதில், 6 சதங்கள் செனா நாடுகள் எனக் குறிப்பிடப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அடிக்கப்பட்டவை.
இந்தியாவுக்கு வெளியே சதம் விளாசிய ஒரு போட்டிகளில்கூட இந்திய அணி வெற்றி பெற்றதே இல்லை என்ற சோகமான வரலாறுக்கு ரிஷப் பந்த் சொந்தக்காரர் ஆகியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் இந்தியா டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!