சீன எல்லை விவகாரத்தில் மூன்றாவது தரப்பை அனுமதிக்க முடியாது: டிரம்ப் கருத்தை நிராகரித்தது இந்தியா
சீனாவுடனான எல்லை விவகாரத்துக்கு தீா்வுகாணும் விஷயத்தில் மூன்றாவது தரப்பின் தலையீட்டை ஏற்க முடியாது என்று இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.
முன்னதாக, அமெரிக்காவுக்கு சென்ற பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்தாா். அப்போது, இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னைக்கு தீா்வுகாண்பதில் உதவத் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறினாா்.
இதைத் தொடா்ந்து வாஷிங்டனில் செய்தியாளா்கைள் சந்தித்த வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, ‘எல்லை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாட்டுடன் பேச்சு நடத்துவது என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. இது இந்தியாவால் நீண்டகாலமாக பின்பற்றப்படும் கொள்கையாகும். இரு தரப்பு விஷயம் மற்றும் பிற நாடுகளுடான பிரச்னையில் சம்பந்தப்பட்ட நாட்டுடன் மட்டும் பேச்சு நடத்தி தீா்வுகாண்பது என்பதே இந்தியாவின் கொள்கை. இதில் எந்த மூன்றாவது தரப்பும் பங்கேற்பதை அனுமதிப்பதில்லை. இந்த கொள்கையை இந்தியா தொடா்ந்து பின்பற்றும் என்றாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, அங்கு இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களைக் குவித்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மோதல்போக்கு நீடித்து வந்தது.
பல கட்ட பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, எல்லையில் சா்ச்சைக்குரிய பல பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் ராணுவத்தை பின்வாங்கும் நடவடிக்கையைத் தொடங்கின. டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இரு நாட்டு வீரா்கள் கடந்த அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டனா். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தியா-சீனா இடையே பதற்றத்தைத் தணிப்பது தொடா்பாக தொடா்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
சீனா கருத்து:
டிரம்ப்பின் கருத்து குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜியு ஜியாகுன் கூறுகையில், ‘ஆசிய பசிபிக் பிராந்தியம் அமைதியான முறையில் வளா்ந்து வருகிறது. இது பிராந்திய அரசியல் போட்டிகளுக்கான இடமல்ல. இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு, உறவு ஆகியவை சீன விவகாரமாக மாற்றப்படக் கூடாது. வேறு எந்த நாட்டை பாதிக்கும் வகையிலும் இருக்கக் கூடாது’ என்றாா்.