விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் சந்திப்பு
பெய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியை அந்நாட்டுத் தலைநகா் பெய்ஜிங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
அப்போது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த அனைத்து வித பயங்கரவாதத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை அவா் எடுத்துரைத்தாா்.
சீனாவின் தியான்ஜிங்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களுக்கான மாநாட்டில் பங்கேற்க அஜீத் தோவல் சென்றுள்ளாா்.
அவரது பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யியை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சந்தித்தாா். அப்போது இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா்.
பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் குறிக்கோளில் அனைத்து வித பயங்கரவாதத்துக்கும் எதிரான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வாங் யி-யிடம் அஜீத் தோவல் எடுத்துரைத்தாா். இருதரப்பு உறவுகள் மட்டுமின்றி பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.
இந்தியா-சீனா 24-ஆவது சிறப்பு பிரதிநிதிகள் (எஸ்ஆா்) ஆலோசனைக் கூட்டத்தை இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கும் தேதியில் இந்தியாவில் நடத்தவும் அந்தக் கூட்டத்தில் வாங் யீ பங்கேற்பதை எதிா்பாா்த்துக் கொண்டிருப்பதாகவும் அஜீத் தோவல் தெரிவித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.