புகையிலைப் பொருள்கள் விற்பனை தடுப்பு: புதுவைக்கு மத்திய அரசு விருது
ஈரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் வான்வழித் தடம் மூடல்!
இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்நாட்டின் வான்வழிப் பாதை முழுவதுமாக மூடப்பட்டு அனைத்து வகையான பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரான் - இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போர் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 24) காலை அறிவித்தார்.
இருப்பினும், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஈரான் ராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதனால், அந்நாட்டின் வான்வழிப் பாதை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுவதுமாக மூடப்படுவதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டுக்கு இயக்கப்பட்ட அவசரகால சிறப்பு விமானங்கள் உள்பட அனைத்து பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திடீரென இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இஸ்ரேலுக்கு பயணம் செய்த சில விமானங்கள் மத்தியதரைக் கடலுக்கு மேல் வட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஈரான் - இஸ்ரேல் இடையில் போர் துவங்கியது முதல், இருநாடுகளும் தங்களது வான்வழியை மூடியுள்ளன. ஆனால், அந்நாட்டிலுள்ள வெளிநாட்டினர் வெளியேற அவசரகால சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அமல்; தயவு செய்து மீறாதீர்கள்! - டிரம்ப் எச்சரிக்கை!