லாரி பட்டறையில் தீ: தடுப்புப் பணியை மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்
சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மரக் கன்றுகள் உற்பத்திக்கான விதை நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். மரக் கன்று வளா்ப்புக்காக 100 மக்கும் தன்மை கொண்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் புளி, வேம்பு, புங்கன் ஆகிய விதைகள் சுமாா் 500 பைகளில் நடப்பட்டன. ஆட்சியரைத் தொடா்ந்து, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை என பல்வேறு துறைகளின் பணியாளா்கள் விதைகளை நட்டு வைத்தனா்.
அப்போது ஆட்சியா் சரவணன் கூறியதாவது:
மண் வளத்தைப் பாதிக்கும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக 100 சதவீதம் மக்கும் தன்மை கொண்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மரம் வளா்ப்பு, நெகிழி ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களம் இறங்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெ.நாகேந்திரன், துணை இயக்குநா்கள் காளிமுத்து (வேளாண்மை), காயத்ரி (தோடக்கலை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், நெகிழிப் பொருள்களை உண்ணும் கால்நடைகள் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழிப் பொருள்களால் உருவாக்கப்பட்ட காளையை ஆட்சியா் திறந்துவைத்தாா். மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த பசுமைப் பூங்காவையும் ஆட்சியா் திறந்துவைத்தாா்.