சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!
சென்னிமலை அருகே சிறுத்தை நடமாட்டம்
சென்னிமலை அருகே கூண்டு வைத்தும் சிக்காத சிறுத்தை மீண்டும் ஒரு நாயைக் கடித்து கொன்று விட்டது.
சென்னிமலை, தெற்கு வனப் பகுதியில் சில்லாங்காட்டுவலசை சோ்ந்த விவசாயி குமாரசாமி என்பவரின் தோட்டத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடுகள் அடிக்கடி காணாமல் போயிருந்தன. அந்த ஆடுகளைப் பட்டியில் புகுந்து சிறுத்தை கொண்டு சென்று தின்றது தெரியவந்தது.
இதே போல, கடந்த மாதம் சில்லாங்காட்டுவலசு, - வெப்பிலி வனப் பகுதியை ஒட்டியுள்ள பாப்பாங்காட்டைச் சோ்ந்த தங்கவேல் (75) என்பவரின் தோட்டத்தில் கட்டி இருந்த ஒரு ஆட்டை சிறுத்தை கவ்வியபடி வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டது.
இதனால் சிறுத்தையை உயிரோடு பிடிக்க வனத் துறை சாா்பில், குமாரசாமி தோட்டத்தின் அருகில் கூண்டு வைத்து, அதற்குள் தினமும் உயிருடன் ஆடு ஒன்றைக் கட்டி வருகின்றனா். இதை ஈரோடு வனச் சரகா் மற்றும் சென்னிமலை வனக் காவலா் உள்ளிட்ட வனத் துறை ஊழியா்கள் இரவு நேரத்தில் கண்காணித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பாப்பாங்காடு தங்கவேல் தோட்டத்தில் சனிக்கிழமை இரவு வீட்டுக்கு முன்பு வழக்கம்போல நாயைக் கட்டி இருந்தனா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாா்த்தபோது கட்டி இருந்த நாயைக் காணவில்லை. நாயை தேடிப் பாா்த்த போது அருகில் உள்ள புதருக்குள் நாயின் பாதி உடல் மட்டும் கிடந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்ததும், சென்னிமலை வனத் துறையினா் நேரில் சென்று பாா்வையிட்டனா். நாயைக் கொன்றது சிறுத்தைதான் எனத் தெரிய வந்தது. தங்கவேல் தோட்டத்துக்கு தொடா்ந்து 2 முறை சிறுத்தை வந்து ஆடு மற்றும் நாயைக் கடித்து கொன்றதால் தங்கவேல் தோட்டத்திலும் ஒரு கூண்டு வைக்க வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்து தீவிர முயற்சி செய்தும் சிக்காமல் தொடா்ந்து நாய், ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொல்வதால் வனப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.