ஜூனியா் தேசிய தடகளம்: தமிழா்களுக்கு 4 தங்கம்
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஜூனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரா், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை 4 தங்கப் பதக்கங்கள் வென்றனா்.
ஆடவா் 200 மீட்டா் ஓட்டத்தில் ஜே.பாண்டியன் 21.33 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடிக்க, குஜராத்தின் ருஷிராஜ் (21.42’), ஒடிஸாவின் பிரதிக் மஹாராணா (21.44’) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
அதிலேயே மகளிா் பிரிவில் தமிழகத்தின் வி.தேஷிகா 24.44 விநாடிகளில் இலக்கை எட்டி சாம்பியனாக, உத்தர பிரதேசத்தின் நிபம் 2-ஆம் இடமும் (24.68’), தில்லியின் சஞ்சனா 3-ஆம் இடமும் (24.80’) பிடித்தனா்.
ஆடவா் மும்முறை தாண்டுதலில் எஸ்.ரவி 15.44 மீட்டருடன் தங்கத்தை தட்டிச் சென்றாா். கேரளத்தின் யுவராஜ் வெள்ளியும் (15.34), உத்தர பிரதேசத்தின் ஷேக் ஜீஷான் வெண்கலமும் (15.27) பெற்றனா்.
மகளிா் பிரிவில் தமிழகத்தின் சாதனா ரவி 12.75 மீட்டருடன் முதலிடம் பிடிக்க, மாநிலத்தின் மற்றொரு வீராங்கனையான பவீனா ராஜேஷ் 12.55 மீட்டருடன் வெள்ளி பெற்றாா். பஞ்சாபின் ஜஸ்லீன் கௌா் (12.42) வெண்கலம் வென்றாா்.