Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
ஜூன் 9-இல் திருமலையில் ஜேஷ்டாபிஷேகம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 9 முதல் 11வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும், ஜேஷ்டாமாசத்தில், திருமலை ஏழுமலையானுக்கு மூன்று நாள்கள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்பட்டு, நட்சத்திரத்துடன் முடிவடைகிறது.
சம்பங்கி பிரதக்ஷிண பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் செய்யப்படும் இந்த விழா, அபித்யக அபிஷேகம் என்றும் அழைக்கப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக செய்யப்படும் அபிஷேகங்கள் மூலம், இறைவனின் பழைமையான சடங்கு சிலைகளை தேய்மானம் மற்றும் அழிவிலிருந்து பாதுகாக்க இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளில், ஸ்ரீ மலையப்ப சுவாமியின் தங்கக் கவசம் அகற்றப்பட்டு, ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் பஞ்சாம்ருத ஸ்நான திருமஞ்சனம் ஆகியவை செய்யப்படுகின்றன. அதன் பிறகு, ஸ்ரீ சுவாமிக்கு வைரக் கவசம் அலங்கரிக்கப்படுகிறது. இரண்டாவது நாளில், முத்து கவசம் அணிவிக்கப்படுகிறது. மூன்றாவது நாளில், திருமஞ்சனங்கள் பூா்த்தி செய்யப்பட்டு, தங்கக் கவசம் மீண்டும் அணிவிக்கப்படும்.
இந்த தங்கக் கவசம் அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின் போது மீண்டும் கழற்றப்படுகிறது. அதுவரை, ஸ்ரீ மலையப்ப சுவாமி ஆண்டு முழுவதும் தங்கக் கவசத்துடன் பல்வேறு விழாக்களில் பங்கேற்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.