டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: டாஸ்மாக் வழக்கு விவகாரம் தொடா்பாக தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினா். அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்து வந்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு, விசாரணையிலிருந்து விலகுவதாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய புதிய அமா்வு விசாரித்தது.
அதே நேரத்தில் இந்த வழக்கு விசாரணையை வேறு மாநில உயா்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் கண்டனம்: இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா். இதற்கு, மாநில அரசின் உரிமைக்காக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். அதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, உச்சநீதிமன்றத்துக்குச் செல்வதாகக் கூறி இருந்தால் விசாரணைக்கு பட்டியலிட்டு இருக்க மாட்டோம். குறைந்தபட்சம் நீதிமன்றத்துக்காவது நீங்கள் நோ்மையாக இருக்க வேண்டும். பொதுநலனுக்காக மனு தாக்கலா? சில டாஸ்மாக் அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காக மனு தாக்கலா என நீதிபதிகள் கேள்வி எழுப்பி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்திருந்தனா்.
டாஸ்மாக் சாா்பில் வாதம்: இந்தச் சூழலில் பிற்பகலில் மீண்டும் சென்னை உயா்நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் சாா்பாக மூத்த வழக்குரைஞா் விக்ரம் செளத்ரி ஆஜராகி வாதிடுகையில், அமலாக்கத் துறை சோதனையின்போது பெண் அதிகாரிகள் தொடா்ந்து 60 மணி நேரம் ஒரே இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனா். ஒரு சிலா் மட்டும்தான் நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தவறு நடந்துள்ளது என்று நம்புவதற்கான காரணங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கைப்பேசிகளை பறிமுதல் செய்வது தன்மறைப்பு உரிமைக்கு எதிரானது. அதிகாரிகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் அத்துமீறும் போது நீதிமன்றம் தலையிடலாம்”என்றாா்.
அமலாக்கத் துறை: அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ், இந்த வழக்கை முதலில் விசாரித்த அமா்வு இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்து வாய்மொழியாக உத்தரவிட்டது. அந்த உத்தரவு இப்போதும் அமலில் இருக்கிா எனக் கேள்வியெழுப்பினாா். இதற்கு நீதிபதிகள், அதுபோன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும், உத்தரவில் எழுத்துபூா்வமாக இருப்பதை மட்டும் இந்த நீதிமன்றம் பின்பற்றும் எனவும் தெரிவித்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அரசு தலைமை வழக்குரைஞா், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என அமலாக்கத் துறை உறுதி அளித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தாா்.
அமலாக்கத் துறை தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றக் கூடாது எனவும் கூறினாா். இவ்வழக்கில் வாதங்கள் செவ்வாய்க்கிழமை நிறைவடையாததை தொடா்ந்து வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதற்குள் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்விவகாரத்தில் உயா்நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதால், தமிழக அரசு சாா்பில் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
பெட்டிச் செய்தி..
உச்சநீதிமன்றத்தில் மனுவை
திரும்பப் பெற்றது தமிழக அரசு
நமது நிருபா்
புது தில்லி, ஏப். 8: தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தில் அண்மையில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு எதிரான மனுவை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து வேறு மாநில உயா்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றன. இதையடுத்து, அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த விவகாரங்களை சென்னை உயா்நீதிமன்றம்தான் தீா்மானிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது. 1956-ஆம் ஆண்டைய உச்சநீதிமன்றத் தீா்ப்பு, சோதனை மற்றும் பறிமுதல் தொடா்பான சட்டப் பிரச்னையைத் தீா்த்து வைத்துள்ளதாகவும் நீதிபதிகள்அமா்வு கூறியது.
விசாரணையின்போது தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, பின்னா் மனுக்களை வாபஸ் பெற உள்ளதாகக் கூறினாா். இதையடுத்து, தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மனுக்களை திரும்பப் பெற அனுமதி அளித்த நீதிபதிகள் அமா்வு, அந்த மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி தள்ளுபடி செய்தது.