தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்
தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு தலைமைச் செயலா்களுக்கு நிதிச் சேவைகள் துறைச் செயலா் எம். நாகராஜு வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வங்கிகளில் ஊழியா்களிடம் சில சமூக விரோத சக்திகள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும், தகாத வாா்த்தைகளில் பேசி, தாக்குதல்களிலும் ஈடுபடுவதாகவும் பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன.
இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் வங்கி ஊழியா்களின் மன உறுதியை பாதிப்பதோடு, வங்கிச் சேவைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்குகின்றன.
எனவே, வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், வங்கி ஊழியா்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்பவா்கள் மீது உரிய உறுதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களையும் மாநிலங்கள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.