தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவருக்கு பிரம்படி தண்டனை!
இந்தோனேசியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களாக உள்ள இரு ஆண்களுக்கு 85 பிரம்படிகள் தண்டனை விதித்து ஷரியத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள பண்டா அச்சே நகரில் 24 மற்றும் 18 வயதான இரு கல்லூரி மாணவர்கள் தனியே வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். அந்தப் பகுதி வாசிகளுக்கு இருவரின் மீதும் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் இருவரும் தனியே அவர்களது அறையில் ஒன்றாக இருந்தபோது கதவினை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது ஆடையின்றி இருந்த அவர்கள் இருவரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பில் ஈடுபட்டது சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் 85 மற்றும் 80 பிரம்படிகள் வழங்குமாறு இஸ்லாமிய ஷரியத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | வங்கதேச விமானப்படைத் தளம் மீது தாக்குதல்: ஒருவர் பலி
இதில், வயதில் மூத்த நபரே இந்த செயலுக்குக் காரணமாக இருப்பார் என நம்புவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம் அவருக்கு 5 பிரம்படிகள் அதிகமாக வழங்கியுள்ளது.
மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் இருவரும் இந்த தண்டனையை ஏற்றுக் கொள்வதாகவும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்தோனேசியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் அச்சே மாகாணத்தில் மட்டும் இஸ்லாமிய ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்தோனேசிய அரசு பிரிவினைவாதப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2006-ல் அச்சே மாகாணத்திற்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமல்படுத்தும் உரிமையை வழங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும், 100க்கும் மேற்பட்டோர் பொதுவில் பிரம்படியால் அடிக்கப்பட்டுள்ளனர்.
அச்சே மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிமல்லாத 1% மக்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
இதையும் படிக்க | அரசு ஊழியர்கள் 1,600 பேர் பணிநீக்கம்: டிரம்ப் உத்தரவு
தன்பாலின ஈர்ப்பாளர்கள் மட்டுமின்றி சூதாடுபவர்கள், மது அருந்துபவர்கள், இறுக்கமாக ஆடை அணியும் பெண்கள், திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்பவர்கள், வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவறவிடும் ஆண்கள் ஆகியோருக்கும் பிரம்படி தண்டனை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக கையெழுத்திட்ட சர்வதேச ஒப்பந்தங்களை இந்தோனேசியா மீறுவதாக மனித உரிமைகள் அமைப்புகள் இந்தச் சட்டத்தை விமர்சித்துள்ளன.
இந்தோனேசியாவின் தேசிய குற்றவியல் சட்டம் தன்பாலின ஈர்ப்பை அங்கீகரிக்கவில்லை. மேலும் அச்சே பகுதியில் ஷரியத் சட்டத்தை ரத்து செய்ய இந்தோனேசிய அரசுக்கு அதிகாரம் இல்லை.