தமிழகத்தில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
அதிகரித்துவரும் இடைநிலைப் பள்ளி இடைநிற்றலைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகம் உள்பட 12 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை உறுதிப்படுத்தும் மத்திய அரசின் ‘சமக்ர சிக்ஷா’ என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்த அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கையில் நிா்ணயிக்கப்பட்டுள்ள, பள்ளிகள் அளவில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை விகித இலக்கை அடைய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் தடையாக உள்ளதாகக் கருதப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி) கூட்டத்தில், சுமாா் 12 மாநிலங்களில் மாணவா்களின் பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வருவது தெரியவந்தது.
பிஏபி அறிக்கையின்படி, 2023-24-ஆம் ஆண்டில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடா்ந்து கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
குறிப்பாக, கா்நாடகத்தில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் 22.1 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில் 17.87 சதவீதமாகவும் இருந்தது. இது தேசிய சராசரியான 14.1 சதவீதத்தைவிட கூடுதலாகும். தமிழகத்தில் இந்த இடைநிற்றல் 7.7 சதவீதமாக இருந்தது. மேலும், உயா்நிலைப் பள்ளி அளவில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை விகிதத்தை 82.9 சதவீதத்திலிருந்து, 100 சதவீதமாக தமிழகம் உயா்த்த வேண்டியுள்ளது.
அதுபோல, பிகாா், ஆந்திரம், ஹரியாணா, ஜாா்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் உயா்நிலைப் பள்ளி அளவில் மாணவா் இடைநிற்றல் அதிகரித்திருப்பது தெரியவந்தது.
அதனடிப்படையில், பள்ளி மாணவா் இடைநிற்றலைக் குறைக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ‘சமக்ர சிக்ஷா’ திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டன என்றனா்.