``அண்ணாமலை அதிருப்தியாக இருக்க வேண்டும் என மற்றவர்கள் நினைக்கிறார்கள்” - தமிழிசை...
3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
ஒடிசாவில் மேலும் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாள்களில் மாநிலத்தில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
மயூர்கஞ்ச் மாவட்டத்தில் 31 வயது பெண் ஒருவரை, அவரது குடும்பத்திற்கு நெருங்கிய நான்கு பேரும் வலுக்கட்டாயமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இல்லாத சமயத்தில் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி நால்வரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும் நால்வரும் மிரட்டியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் நால்வரும் தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம், மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை கோபால்பூர் கடற்கரையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நான்கு சிறார்கள் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
செவ்வாய்க்கிழமை கியோஞ்சர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.