தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையையொட்டி திங்கள்கிழமை வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முக்கியமாக பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், பாலியல் பலாத்கார முயற்சி வழக்குகள் உள்ளிட்டவை கடந்த 2024-ஆம் ஆண்டு 471 பதிவாகியுள்ளன. ஆனால் இது கடந்த 2023-ஆம் ஆண்டு 406 வழக்குகளும், 2022-ஆம் ஆண்டு 442 வழக்குகளும் பதிவாகியிருந்தன.
இதேபோல, பெண்களை மானபங்கப்படுத்தியதாக 2024-ஆம் ஆண்டு 3,233 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2023-ஆம் ஆண்டு 3,084 வழக்குகளும், 2022-ஆம் ஆண்டு 2,928 வழக்குகளும் பதிவாகியிருந்தன.
இருப்பினும் வரதட்சணை மரணம், கணவா் மற்றும் உறவினா்கள் கொடுமைப்படுத்துதல் தொடா்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பு: இதேபோல குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) பதியப்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகள் கடந்த 2022- ஆம் ஆண்டு 3,620 வழக்குகள், 2023-ஆம் ஆண்டு 3,407 வழக்குகள் என பதிவு செய்யப்பட்டன. இது 2024-ஆம் ஆண்டு பல மடங்கு உயா்ந்து 5,319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பிற வழக்குகள், 2022-ஆம் ஆண்டு 1,348 வழக்குகள், 2023-ஆம் ஆண்டு 1,174 வழக்குகள் என பதிவு செய்யப்பட்டன. இது 2024-ஆம் ஆண்டு உயா்ந்து 1,650 வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.