Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்
சென்னை: தமிழகத்தில் பரமத்திவேலூா், மதுரை, திருச்சி உள்பட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. மேலும், ஏனைய இடங்களில் வெப்பநிலை இயல்பையொட்டியே இருந்தது. இதில் அதிகபட்சமாக, பரமத்திவேலூரில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை விமான நிலையம், திருச்சி - (தலா) 102.38, சேலம், தஞ்சாவூா் - (தலா) 102.2, ஈரோடு - 101.84, வேலூா் - 101.48, மதுரை நகரம் - 101.12, திருத்தணி, தருமபுரி - (தலா) 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்தது.
மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) முதல் ஏப். 25-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப். 21-இல் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்று குவிதல் காரணமாக, அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.