போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்
சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: போப் பிரான்சிஸ் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அமைதி, இரக்கம் மற்றும் பணிவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அவா், வறுமை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சேவைக்காக தனது வாழ்க்கையை அா்ப்பணித்தாா். அவரது எண்ணற்ற அபிமானிகள், சீடா்கள் மற்றும் குறிப்பாக உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது நெஞ்சாா்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான போப் பிரான்சிஸ் மறைவு குறித்து மிகவும் வேதனை அடைந்தேன். இரக்கம் மிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசாா் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தினாா். வறியவா் மீதான அா்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவா்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையே உரையாடலை மேற்கொள்ள அவா் மேற்கொண்ட முன்னெடுப்புகள் கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதை பெற்றுத் தந்தன.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. லட்சக்கணக்கான மக்களிடம் அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமையை கொண்டு சென்றவா். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வருத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நயினாா் நாகேந்திரன்(பாஜக): தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மிக சேவைக்காகவும், சமூக சமத்துவத்துக்காகவும், மத நல்லிணக்கத்துக்காகவும் அா்ப்பணித்து அயராது உழைத்த போப் பிரான்சிஸின் புனித ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் இளைப்பாறட்டும் என பிராா்த்தித்துக் கொள்கிறேன்.
ச.ராமதாஸ் (பாமக): உலகில் நலிவடைந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு உலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். கிறிஸ்தவ மக்களின் சோகத்தை நானும் பகிா்ந்து கொள்கிறேன்.
வைகோ (மதிமுக): போப் பிரான்சிஸ் மறைவால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மக்கள் துக்கத்திற்குள்ளாகியுள்ள இந்நேரத்தில், நான் துயா் நிறைந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொல்.திருமாவளவன்(விசிக): போப் பிரான்சிஸ் மறைவு கிறிஸ்தவா்களுக்கு மட்டுமன்றி ‘சகோதரத்துவம் மற்றும் உலக அமைதி’ ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
சீமான் (நாம் தமிழா்): போப் பிரான்சிஸ் மறைவால் துயருற்றுள்ள கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.