தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 4 பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த தமிழக மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் என 4 பேர் விசைப் படகுகளில் மீன் வளம், மீனவா் நலத் துறையினரிடம் அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளைர்கள் மீனவா்களை அரிவாள், கல், கட்டை கொண்டு தாக்கி கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர். மேலும், விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனா்.
இந்த நிலையில், பலத்த காயங்களுடன் கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் தொடர்வது மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.