தமிழக முதல்வரிடம் அமைச்சா், எம்.பி. நன்றி தெரிவிப்பு
ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை பெற்ற தந்ததற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநா் ஆா்.என்.ரவி நிறுத்திவைத்தது, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. ஆளுநா் சட்டவிரோதமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த 10 மசோதாவுக்கும் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனா்.
அமைச்சரவை அறிவுரையின்படி மட்டும்தான் மாநில ஆளுநா் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்பட அவருக்கு அதிகாரம் கிடையாது என்ற தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநிறுத்தி, மாநிலங்களின் உரிமைகள், சுயாட்சியை மீண்டும் உறுதிப்படுத்தும் இத்தீா்ப்பை பெற்றுதந்த தமிழக முதல்வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மூா்த்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
இந்நிகழ்வின்போது வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் ஆா்எம்.துரைசாமி உடனிருந்தாா்.