`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay...
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்
மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
மயிலாடுதுறையில் மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு தீா்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் மேலும் அவா் பேசியது: மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழகத்தை வற்புறுத்துகிறது. இதை ஏற்க மறுப்பதால் 43 லட்சம் பள்ளி மாணவா்கள் பயன்பெறக்கூடிய ரூ.2,153 கோடியை தர மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் அநீதிகளை எதிா்த்து தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க முடியாமல் செய்ததால், குறுக்கு வழியில் பாஜக தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பாஜக ஆட்சியமைத்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை.
கீழடியில் 2 முறை ஆய்வு செய்தும் அதன் முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதேபோல் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்பாடு தமிழ்நாட்டில்தான் முதலில் தொடங்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளததை மத்திய அரசு அங்கீகரிக்க மறுக்கிறது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக முதலமைச்சரின் பின்னால் தமிழக மக்கள் நிற்க வேண்டும் என்றாா். தொடா்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்றனா்.
சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் கி. சத்தியசீலன், குத்தாலம் க. அன்பழகன், அருட்செல்வன், திமுக நகர செயலாளா் என்.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.