``தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது!” - திருமாவளவன்
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கு பெற்று பின்னர் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“தமிழக ஆளுநர் எக்ஸ் வலைதளத்தில், ‘தமிழகத்தில் மும்மொழி தேவை. இளைஞர்களை எதிர்காலத்தை தடுக்கின்றனர்’ என குற்றம் சாட்டி உள்ளது பற்றி கேட்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளவர் தமிழக ஆளுநர் ரவி. இந்தியாவில் பழமொழிகள் பேசுகின்ற தேசிய இனங்கள் வாழ்கின்றோம். அதிலே ஒன்று இந்தி.

தமிழை தாய்மொழியாக கொண்டவர்களை கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்று சொல்லுவது அவர்கள் ஆதிக்க போக்கை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில மட்டும் அல்ல, இந்தி அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட பிற மாநிலத்திலும் இந்தி திணிக்க கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தை நிலைப்பாடு.
ஆர்.என். ரவி ஒரே தேசம், ஒரே மொழி, என்கிற ஆர்.எஸ்.எஸ் அர்ஜெண்டாவை நடைமுறைப்படுத்துவதற்காக இப்படி தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாட்டு மக்களை எதிர்காலத்தில் இந்தி பேசும் மக்களாக மாற்றுவது, ஒரே தேசம், ஒரே மொழி உருவாக்குவது இந்திக்குப் பிறகு சமஸ்கிருதமே இந்தியாவில் ஒற்றை மொழி என மாற்றுவது என்ன செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆர்.என்.ரவியின் மாயாஜால பேச்சுக்கு இணங்க மாட்டார்கள்.

வரும் 2026 -ல் 25 இடங்களில் போட்டியிடுவது தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது என்று வன்னி அரசு கூறியுள்ளது பற்றி கேட்கிறீர்கள். அதுகுறித்து, தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்.
விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்... நடைமுறைப்படுத்த வேண்டும்...களமிறங்கி பணியாற்ற வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், இயக்கத்தோழர்களை இயக்குவது, அணி திரட்டுவது என்னும் பொருளில் விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளோம். எனவே, விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் அரசியலில் காய் நகர்த்த முடியாது என்ற நம்பிக்கை ஊட்டுகிறோம்’ என்றவரிடம்
‘திருமாவளவனை விலை கொடுத்து வாங்க முடியாது என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால், யார் உங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தார்கள்?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பதில் எதுவும் கூறாமல் கடந்து சென்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
