திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு
திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த புதிய மருத்துவமனையில், இம்யூனோ தெரபி மற்றும் துல்லிய கீமோதெரபி உள்பட பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்காக 50 படுக்கைகள் கொண்ட ஒரு பகல்நேர சிகிச்சை மையமும் உள்ளது. காவேரி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், புற்று நோய்களை கண்டறிய அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ளன. ட்ருபீம் எனும் மேம்பட்ட கதிா்வீச்சு சிகிச்சை அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. இதன் மூலம் மூளை, நுரையீரல், தலை மற்றும் தொண்டைப் பகுதி போன்ற உறுப்புகளில் உள்ள நுண்ணிய புற்றுநோய் கட்டிகளையும் குணப்படுத்த முடியும்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் இணை நிறுவுனா் மற்றும் செயல் இயக்குநா் டி. செங்குட்டுவன் கூறியதாவது, திருச்சிக்கு அதிநவீன புற்றுநோய் சிகிச்சை தொழில்நுட்பத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கூடிய விரைவில் புற்றுநோய்க்கான அணு மருத்துவத்தையம் அறிமுகப்படுத்த உள்ளோம். எங்கள் குழுவில் அறுவைசிகிச்சை மற்றும் பல்வேறு மருத்துவ நிபுணா்கள் உள்ளனா். இனி அதிநவீன, மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்காக பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்றாா்.
மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட்டின் புற்றுநோயியல் துறைத் தலைவா் டாக்டா் அனிஷ் கூறியது, இந்த புதிய மருத்துவமனையின் சிறப்பு அனைத்து வகை புற்றுநோய் சிகிச்சைகளையும் வழங்க வலுவான நிபுணா்கள் குழு முழுநேரமும் இருப்பதுதான். இதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் சிறந்த, பிரத்யேக சிகிச்சைகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது என்றாா் அவா். திறப்பு விழாவில், மேயா் மு. அன்பழகன் மற்றும் மருத்துவமனை நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.