துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!
துருக்கியின் கடலோர நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் குழு மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்ட தகவலில்,
துருக்கியின் கடலோர நகரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அங்குள்ள குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியதில், வீட்டின் ஜன்னல் மற்றும் பால்கனிகளில் இருந்து குதித்தனர். இதனால் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த நிலநடுக்கமானது இன்று அதிகாலை 2.17 மணிக்கு ஏற்பட்டதாகவும், இது மத்திய தரைக் கடலில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. கிரேக்கத் தீவான ரோட்ஸ் உள்பட அண்டை பகுதிகளில் இது உணரப்பட்டது.
துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா வெளியிட்ட எக்ஸ் பதிவில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பயத்தில் 14 வயது சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்தார். இளம்பெண்ணுக்கு முன்னதாக உடல்நிலையில் பாதிப்பு இருந்ததா என்பது தெரியவில்லை. கூறினார்.
நிலநடுக்க பீதியில் ஜன்னல், பால்கனிகளில் இருந்து குதித்ததில் காயமடைந்த சுமார் 70 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும், கட்டடங்கள் சேதம் அடைந்ததாக எந்தவித தகவலும் இல்லை என்று அவர் கூறினார்
துருக்கி நாடு பெரிய பிளவுக் கோடுகளின் மேல் அமைந்துள்ளதால் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.