அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் தயக்கம்: அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்கள்! ...
தூத்துக்குடி கொலைச் சம்பவத்தில் 7 ஆண்டுகளுக்குப்பிறகு... கொலையாளிகள் சிக்கியது எப்படி?
தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் காயங்களுடன் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து இறந்த நபரின் உடலில் உள்ள அடையாளங்கள், விரல் ரேகைகள் மற்றும் பிற அடையாளங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், உயிரிழந்த நபர் விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பது தெரியவந்தது. பின்னர், இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையில் உறுதியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காமலும் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டும் இந்த வழக்கு, கடந்த 7 ஆண்டுகளாக தீர்வு கிடைக்காமல் இருந்து வந்தது.
இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கடந்த பிப்ரவரி மாதத்தில் விளாத்திகுளம் டி.எஸ்.பி அசோகன் மேற்பார்வையில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினரின் தீவிர விசாரணையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு மதுபானம் அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பொன்னுச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இவ்வழக்கில் கோபாலகிருஷ்ணன், கருப்பசாமி, ராஜராஜன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முந்தைய சாட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள், சந்தேகப்படும் நபர்களின் உடலில் உள்ள காயங்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கூறிய தகவல்கள் ஆகியவை மீண்டும் ஆராயப்பட்டது.
மேலும் இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு கிராமத்தை விட்டு சென்றவர்கள் யார் யார் என தனித்தனியாக கண்டறியப்பட்டனர். தீவிர விசாரணையில் புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான கோபாலகிருஷ்ணன், கருப்பசாமி, ராஜராஜன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோர்தான் குற்றவாளிகள் என்பதை கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பொன்னுச்சாமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். ஒன்றாக வேலை செய்து வந்த அவர்கள், 7 ஆண்டுகளுக்கு முன் மதுபானம் அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பொன்னுச்சாமி கொலை செய்துள்ளனர்.” என்றனர்.