தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; கைவிட மறுப்பு - வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு மாயாண்டி கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேஷ். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி இரவில் வல்லநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கிக் கொண்டு அக்கடையில் அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த ஒருவர் முருகேஷை வெட்ட முயன்றார். சுதாரித்துக் கொண்ட முருகேஷ், அவரிடமிருந்து தப்பியோடினார்.

இருப்பினும் முருகேஷை அவர், ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர், டாஸ்மாக் கடை முன்பு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசஷை வெட்டிய நபரை கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த கொம்பையா என்பவர்தான் முருகேஷை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கொம்பையாவை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில், “என் வீடு டாஸ்மாக் கடை இருக்கும் தெருவில் உள்ளது. நான் வெளியூரில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறேன். நானும் எனது மனைவியும் சிறு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம். முருகேஷ் தினமும் டாஸ்மாக் கடைக்கு வரும் போது என் மனைவியிடம் எப்படியோ பேசி பழகியுள்ளார்.

நாளடைவில் அப்பழக்கம் திருமணம் தாண்டிய உறவாக மாறிவிட்டது. இதையறிந்த நான், முருகேஷை அழைத்து மனைவியுடனான பழக்கத்தை கைவிடும் படி கூறினேன். ஆனாலும், தொடர்ந்து பழகி வந்துள்ளார். கடந்த 17-ம் தேதி இரவு டாஸ்மாக் கடை அருகில் மது அருந்திக் கொண்டிருந்த முருகேஷை சந்தித்தேன். இது வரைக்கும் நடந்ததை விட்டுவிடு இனிமேல் என் மனைவியுடன் பழக வேண்டாம் எனக் கூறினேன். அதற்கு முடியாது என திமிராகப் பேசினார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து முருகேஷை வெட்டினேன்.” எனக் கூறியுள்ளார்.