தென்காசி: அதீத துர்நாற்ற்றம்... புதர் அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்! - போலீஸ் விசாரணை
தென்காசி மாவட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், " தென்காசியை அடுத்த இலத்தூரில் மதினாப்பேரி குளம் உள்ளது. இந்த பகுதி அருகே மனித உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக இலத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், விரைந்து வந்த இலத்தூர் போலீஸார், சம்பவ இடத்தில் எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் பெண் என தெரியவந்தது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை எரித்துக் கொலை செய்தது யார்? பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என எந்த தகவலும் உடனடியாக தெரியவராததால் இறந்த பெண்ணை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர். தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.