Valentine's Day: 'கண்மணி அன்போடு' முதல் 'அன்பே டயானா' வரை... காதல் கடந்து வந்த ப...
ஒரு ரூபாய்க்கு 20 இட்லி : திருப்பூர் பால்ய நினைவுகளை பகிரும் அரசியல் பிரமுகர் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
1965ல் நாங்கள் திருப்பூர் வந்த பொழுது கருவம்பாளையம் ஒரு அழகான சிறிய கிராமம். கொங்கு நாட்டின் மாண்பை பறைசாற்றிய கிராமங்களில் குறிப்பிடத்தக்கது கருவம்பாளையம். திருப்பூரின் வளர்ச்சிக்கு கருவம்பாளையத்தின் பங்கு குறிபிட்டத்தக்கதாகும்.
கொங்கு நாட்டின் 72 பாளையங்களில் அதுவும் ஒன்று, கொங்கு நாட்டின் எல்லைகள் கிழக்கே காவிரியாறும், மேற்கே பாலக்காட்டு கணவாயும், வடக்கே நீலகிரி மலையும் தெற்கே பழனிமலையுமாகும்.
கிராமங்களுக்கே உரித்தான நெருக்கமான வீதிகள், தொட்டி கட்டு வீடுகள்.. தொட்டி கட்டு வீடு என்பது நான்கு புறமும்., அல்லது மூன்று புறமும் அறைகளும் அதையொட்டி திண்ணைகளும் திண்ணையையொட்டி வீட்டின் விஸ்திரானத்தை பொறுத்து வீட்டின் நடுவே சூரிய ஒளியும், மழையும் பெய்யுமாறான சதுர வடிவிலோ நீள் சதுர வடிவிலோ கட்டப்படும்.
இதனால் சூரிய ஒளி உள்ளவரை வீடுகள் வெளிச்சமாக இருக்கும் திண்ணையில் பெண்கள் அமர்ந்து தானியங்களை சுத்தம் செய்யவும் சமையலுக்கான காய்கறிகளை நறுக்கவும் வெளிச்சம் நன்கு இருக்கும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/woy1tyun/27754b13-1556-4cd3-871b-ce41592d9457.jpg)
குழந்தைகளை தூங்க வைக்கவும் பெண்கள் வீட்டு வேலையை முடித்துக் கொண்டு மதியம் ஒரு குட்டி தூக்கம் போடவும் இந்த திண்ணைகள் பயன் படும். மழைகாலங்களில் ஜோவென மழை பெய்வதை பார்க்க முடியும். மழைநீரை சேமித்து துணிகளை துவைக்கவும், நீரை காய்ச்சி சுத்தமான நீரை குடிக்கவும் முடியும். இன்றைய கேன் வாட்டர்களை விட பல மடங்கு தூய்மையான ருசியான நீரை பெற முடியும்.
வீதியில் பெரிய தொட்டி கட்டு வீடுகளும் சிறிய தொட்டி கட்டு வீடுகளும் இருக்கும். தானியங்களை காய வைக்க இந்த அமைப்பு வசதியாக இருந்தது. பெரும்பாலானவர்களுக்கு விவசாய நிலம் இருந்தது..
பழமையான மாகாளியம்மன் கோயில், குயவர்ளின் மண்பாண்ட தயாரிப்புக்கள் என வாழ்வதற்கு வசதியாக இருந்தது. வருடம் ஒரு முறை கோயில் சாட்டு(கோயிலில் சட்டி சோறு கொண்டு வந்து, அம்மனை வழிபடும் விழா) இருக்கும். சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் இது ஒரு பொற்காலம்..
காய்கறிகள் மிகவும் மலிவான விலைக்கு கிடைத்தன. இட்லி கார அம்மாக்கள் இருந்தனர். பஞ்சு போன்ற இட்டிலிகள் ரூபாயிக்கு இருபது கொடுத்தனர். கார சட்டினியும் சாம்பாரும் இருக்கும் காலையில் வேலைக்கு செல்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/ppstg94m/8f82e173-cf4d-454f-aa2a-ab42131c145a.jpg)
அன்றெல்லாம் 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசியே 40ரூபாய் தான். தங்கம் ஒரு கிராம் 30 ரூபாய்தான்.. அரசு ஊழியர்களின் சம்பளம் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய்தான்.. கலெக்டரின் சம்பளம் 750 ரூபாய் தான்.. ஃபியட் அம்பாசடர் கார்களின் விலை 4000 ஆயிரம்தான்.
கருவம்பாளையத்திலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் நொய்யல் ஆறுஇருந்தது. அதன் கிளை வாய்க்கால்கள் திருப்பூரை சுற்றி மாலை போல ஓடிக்கொண்டிருந்தது. நொய்யலில் வருடம் முழுவதும் கனுகால் அளவு நீர் ஓடிக் கொண்டிருக்கும் உலகின் இரண்டாவது சுவையான நீர் அது.
திருப்பூரை சுற்றி நிறைய ஜின்னிங் பேக்டரிகளும் ஸ்பின்னிங் மில்களும் இருந்தன. இதில் வீட்டுக்கு ஒருவர் வேலைக்கு சென்றனர். பெண்கள் பின் கொசுவம் வைத்து சேலைகளை அணிந்து பித்தளை தூக்கு போசியில் மதிய உணவை எடுத்துக் கொண்டு முனிசிபாலிட்டி சங்கையும் மில்களின் சங்கையும் வைத்து நேரத்தை கணித்து வேலைகளுக்கு சென்றனர். பெண்கள் வேலைக்கு வரிசையாக செல்வதை `காட்டன் காலேஜ்' என்று அடைமொழியில் அழைத்தனர்.
நாங்கள் ஒரு பெரிய தொட்டி கட்டு வீட்டில்மாதம் 15 ரூபாய் வாடகைக்கு குடி வந்தோம். ஓடுகள் மேய்ந்த இரண்டு பெரிய ஆசாரங்கள்(ஹால்)நடுவில் தொட்டி கட்டு அதையொட்டி திண்ணையுடன் கூடிய ரூம் ஆசாரத்த்தை அடுத்து சமையலறை குளியல் அறை பின் புறம் தானியங்களை உலர்த சிமிட் தளம் அதையொட்டி தானியங்களை வைக்க ஒரு அறையென விஸ்தீரமாக இருந்தது அந்த வீடு..
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/ugwoa7j4/fd86755d-970b-4dc4-baf8-188be3b107dd.jpg)
அப்பொழுது நான் 9ம் வகுப்பில் நஞ்சப்ப செட்டியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன் 9ம்வகுப்பில் நான் எந்த சப்ஜெட்டிலும் 25 மார்க்கை தாண்டவில்லை. எங்கள் வீட்டின் அருகிலிருந்த வாத்தியாரின் புண்ணியத்தில் எப்படியோ 9ம் வகுப்பில் பாஸ் செய்தேன்.
என்னை பிஷப் உபகார சாமி பள்ளியில் என் அண்ணன்கள் சேர்த்து விட்டனர்.. என் அண்ணன்கள் எல்லோரும் அந்த பள்ளியிலேயே படித்திருந்ததால் அங்கே சண்முகசுந்தர பண்டிட் என்னும் தமிழ் வாத்தியார் எங்களின் குடும்ப நண்பராக இருந்தார். நான் கொண்டு செல்லும் மதிய உணவை பள்ளிக்கு அருகாமையில் இருந்த அவர் வீட்டிலேயே உண்டு பள்ளிக்கு சென்று வந்தேன்.
கருவம்பாளையத்தில் குறிப்பிடதக்கது நொய்யல் நதியே ஆகும். நான் ஸ்கூலுக்கு சென்று வரும் வழியில் அந்த நீரையே குடித்து வந்தேன். ஊத்தை பறித்து விட்டால் 5 நிமிடத்தில் தெள்ள தெளிவான நீர் கிடைக்கும்..
மழைகாலங்களில் வெள்ளம் நொய்யலில் புரண்டு ஓடும்…
அதன் வேகம் அபரிதமானது..இன்று நினைத்தால் கூட மனக்கண்ணில் அது புரண்டு ஓடும் காட்சிகள் வருகின்றது..
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-12/69f0e038-9ed1-43fc-b1ff-0aebfedefd5f/noyyal_river_2.jpg)
திருப்பூரில் பனியன் உற்பத்தி அதிகமாக அதிகமாக நொய்யல் காணாமல் போய்விட்டது..
மேற்கத்திய நாடுகள் தங்கள் நதிகளை பாதுகாக்க சாய தயாரிப்பையும் சாயமிடும் ஆலைகளையும் இழுத்து மூடிவிட்டு நம் நாட்டுக்கு ஆர்டர்களை கொடுக்கின்றது..
இன்று 0 டிஸ்சார்ஜ் வந்துவிட்டாலும் மக்கள் தொகை வளர்ச்சியால் கழிவு நீர் வாய்காலாக நொய்யல் மாறிவிட்டது..
இன்று பனியன் உற்பத்தியில் உலகின் முக்கியமான நகரமாக திருப்பூர் உள்ளது..
ஒன்றை இழந்து தானே ஒன்றை பெற முடியும் என்னும் இயற்கையின் விதிக்கு நொய்யலும் திருப்பூரும் தப்ப முடியவில்லை..
காஞ்சிமாநதி என்று சரித்திர காலங்களில் பெருமை சேர்த்த நொய்யல் நதி இன்றில்லை.. ரியல் எஸ்டேட் டின் வளர்ச்சியால் அதன் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வனமாக இருந்த அதன் கரைகள் இன்று காங்கிரிட் காடுகளாக மாறிவிட்டது..
1970 களில் மழை காலங்களில் ஆக்கிரப்பையெல்லாம் புரட்டி போட்டு நொய்யல் பொங்குவதை பார்த்துள்ளேன். நொய்யலின் வெள்ளம் வடிந்து மணல் திட்டுகளாக அதன் கரை இருக்கும் மணல் சிற்பங்களாக மனித உடல்கள் அதில் சொருகிக் கொண்டிருப்பதை பதைபதைத்து பார்த்துள்ளேன்..
கருவம்பாளையத்துக்கே அழகு சேர்த்த நொய்யல் இன்று இல்லை.. பேரூரில் ஆரம்பித்து கொடுமுடி வரை லட்சக்கணக்கான விவசாய நிலங்களுக்கு அரணாக இருந்த நொய்யல் இன்று இல்லை.
ஒன்றை இழந்து தானே ஒன்றையடைய முடியும் என்ற ஆறுதல்களை ஏற்க முடிவதில்லை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-01/f15e0a9f-a100-48d1-abc8-2fd0e06ecd17/IMG_1910.png)
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...