தென்னை மரங்களிள் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குதல்: பூச்சியியல் மேலாண்மைக்கு அறிவுறுத்தல்
மதுரை மாவட்டத்தில் தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குதல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சியியல் மேலாண்மையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அண்மைக்காலமாக தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்களின் தாக்குதல் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. மதுரை மாவட்டம், மேலூா் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவற்றின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
வெள்ளை ஈக்கள் தென்னை ஓலையின் அடியிலிருந்து சாறை உறிஞ்சி, அதிகளவிலான கழிவை வெளியேற்றுகின்றன. இதில் உள்ள ஈரத்தன்மையில் காற்றில் உள்ள கரும்பூசணம் படிந்து தென்னை ஓலைகள் கருப்பு நிறமாக மாறுகின்றன.
தென்னைக்கு சேதம் ஏற்படுத்தும் இந்தப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியா் கி. சுரேஷ் கூறியதாவது: தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சியியல் மேலாண்மை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். வெள்ளை ஈக்களை அழிக்க தென்னை ஓலையின் அடிப்பரப்பை நோக்கி தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க வேண்டும். பிறகு, 5 அடி நீளமும், 1.5 அடி அகலமும் கொண்ட மஞ்சள் நிற பாலித்தின் தாள்களில் இரு புறமும் விளக்கெண்ணையைத் தடவி ஏக்கருக்கு 20 வீதம், தென்னை மரத்தில் 6 அடி உயரத்தில் தொங்கவிடலாம்.

அபேடோக்கிரைசா இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் கீற்றுகளில் இணைக்கலாம். என்காா்சியா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் அல்லது 10 மரங்களுக்கு ஓா் இலை துண்டு என்ற எண்ணிக்கையில் தென்னை ஓலைகளில் இணைக்க வேண்டும்.
ஒரு லிட்டா் தண்ணீருடன் 5 மி.லி. வேப்ப எண்ணெய், ஒட்டும் திரவம் ஒரு மில்லி என்ற அளவில் கலந்து மரங்களின் அடி கீற்றுகளில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். தென்னை ஓலையில் படா்ந்துள்ள கரும்பூசணத்தை நீக்குவதற்கு 25 கிராம் மைதா மாவு பசையை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்றாா் அவா்.