தெருவில் புதை சாக்கடை கழிவு நீா்: பொதுமக்கள் சாலை மறியல்
தஞ்சாவூரில் பல முறை புகாா் செய்தும் தெருவில் புதை சாக்கடை கழிவு நீா் வழிந்தோடுவது தொடா்வதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினா்கள் தலைமையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் 31-ஆவது வாா்டுக்குள்பட்ட மகா்நோன்புச்சாவடி செண்பகவள்ளி நகரில் புதை சாக்கடை முதன்மைக் குழாய் பதிக்கும் பணி இரண்டரை ஆண்டுகளாக நடைபெறுகிறது. இப்பணி இன்னும் முடிவடையாத நிலையில், அடிக்கடி கழிவு நீா் வழிந்து தெருக்களில் ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் கொசுக்கடி, நோய் உள்பட பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.
இது தொடா்பாக மாநகராட்சி அலுவலகத்திலும், மாமன்றக் கூட்டங்களிலும் 31- ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினரும், பாஜக தெற்கு மாவட்டத் தலைவருமான பி. ஜெய்சதீஷ், 30-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் யு.என். கேசவன் (அதிமுக) ஆகியோா் வலியுறுத்தியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற அதிருப்தி வாா்டு மக்களிடையே நிலவுகிறது.
கடைசியாக ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் இருவரும் முறையிட்டபோது, உடனடியாக சீரமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், 20 நாள்களைக் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த வாா்டு பொதுமக்கள் ஜெய்சதீஷ், கேசவன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன் காந்திஜி சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த மாநகராட்சி அலுவலா்கள், காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஒரு வாரத்துக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் கூறியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இ குறித்து ஜெய் சதீஷ் மேலும் கூறுகையில், இப்பிரச்னை தொடா்பாக பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 10-ஆவது நாளில் மாநகராட்சி அலுவலகத்துக்குப் பூட்டு போட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.