வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
``செவி வழி செய்தியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேசக் கூடாது.." - சீமான் குறித்து மனோ தங்கராஜ்
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பதற்கு கடன் வழங்கும் திட்டத்தை மேம்படுத்தியுள்ளோம். அனைத்து சங்கங்களையும் லாபகரமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.

செயலிழந்த சங்கங்களை செயல்பட வைத்ததுடன் புதிதாக 2,484 சங்கங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் பல சங்கங்கள் லாபகரமாக செயல்பட முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகிறார்கள்.
தனியார் கல்லூரி எம்பிஏ மாணவர்கள் உதவியுடன் நலிவடைந்த சங்கங்களை லாபகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கிராமப் பகுதிகளில் ஆவின் பொருள்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் எதிர்பாராதளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

அதில் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கிறது. மனிதவளம் முக்கியம். அதை வைத்து நாம் தொழில்நுட்பத்தை கையாள வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை பாலின் தரம் நன்கு உயர்ந்துள்ளது.
சீமான் போராட்டத்தை மட்டுமல்லாமல், இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும். விமர்சனம் செய்பவர்கள் முன்னேற்றத்தை பற்றியும் பேச வேண்டும். பாலில் கொழுப்பை சேர்த்தோம், டிட்டர்ஜென்ட் சேர்த்தோம் என்று விமர்சனம் செய்தார்கள். அப்படி சொன்னவர்கள் இப்போது வாயடைத்து போயுள்ளார்கள்.

வளர்ச்சிக்கான சிறப்பான திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள். அதை நிச்சயம் ஏற்கிறோம். அரசியல் தலைவர்கள் செவி வழி செய்திகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேசக் கூடாது. நன்கு ஆராய்ந்து பேச வேண்டும். அதுதான் அறிவுக்கு அழகு.” என்றார்.