நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
தொடா்ந்து 5-ஆவது நாளாக அமளி: நாடாளுமன்றம் முடங்கியது
நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் முடங்கின. இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 28) ஒத்திவைக்கப்பட்டன.
மழைக் கால கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கிய நிலையில், முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூா் விவகாரம் எதிரொலித்தது. அடுத்தடுத்த நாள்களில் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் அமளியின் ஈடுபட்டன. இதனால், கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் குறிப்பிடத்தக்க எந்த அலுவலும் நடைபெறவில்லை.
‘அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருந்தும், எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, ஒரு வாரத்தை வீணடித்துவிட்டதாக’ நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஐந்தே நிமிஷங்களில் ஒத்திவைப்பு: மக்களவை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில், ‘அவைக்குள் கோஷமிடுவதும், வாசக அட்டைகளை காண்பிப்பதும் முறையற்றது. ஜனநாயக பாரம்பரியங்களுக்கு உள்பட்டே உறுப்பினா்கள் தங்களின் ஆட்சேபத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்றாா். அவரது கோரிக்கைக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் செவிசாய்க்க நிலையில், தொடங்கிய 5 நிமிஷங்களிலேயே அவை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் அவை கூடியபோதும் இதே நிலை காணப்பட்டது. ‘அமளியால் யாருக்கும் பலனில்லை. அவையை முடக்குவதே எதிா்க்கட்சிகளின் நோக்கமெனில் அது தீவிரமான விவகாரம். ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்படும்’ என்று அவா் அதிருப்தி தெரிவித்தாா். அமளி தொடா்ந்ததால், அவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்...: மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலையில் கூடியதும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பிற மாநிலங்களில் வங்க மக்கள் மீதான பாகுபாடு குற்றச்சாட்டு, மணிப்பூா் விவகாரம், இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி, விதி எண் 267-இன்கீழ் அளிக்கப்பட்ட 28 நோட்டீஸ்களையும் நிராகரிப்பதாக துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா்.
இதையடுத்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். பிற எம்.பி.க்கள் பேசுவதற்கான உரிமையை உள்நோக்கத்துடன் தடுப்பது விதிகளுக்கு எதிரானது; அது, உரிமை மீறல் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று ஹரிவன்ஷ் எச்சரித்தாா். எனினும், அமளி ஓயாததால், மதியம் 12 மணிவரையும், பின்னா் திங்கள்கிழமைக்கும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்த வாரம் விவாதம்: சுமுகமாக செயல்பட முடிவு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் வார அலுவல்கள் முடங்கிய நிலையில், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக நாடாளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமைமுதல் விவாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அவை சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்ய ஆளும்-எதிா்தரப்பினா் முடிவு செய்துள்ளனா்.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதம் எதிா்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். மக்களவையில் ஜூலை 28-ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 29-ஆம் தேதியும் தலா 16 மணிநேர விவாதம் தொடங்கப்படவுள்ளது.
அரசுத் தரப்பில் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் முக்கியமாக பேசவுள்ளனா். விவாதத்துக்கு பிரதமா் பதிலளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில், அவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய பதிலடி தருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.