அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
தொடா் மழையால் செந்நிறமாக மாறிய ஒகேனக்கல் காவிரி !
கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரியில் வரும் நீா் செந்நிறமாக மாறியுள்ளது.
கா்நாடகா மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல தமிழக நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா நீரோடையில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும்,
கா்நாடக அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 33,000 கன அடியாக இருந்தது. பின்னா் இரு மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வந்த மழையின் அளவு சற்று குறைய தொடங்கியது. இருப்பினும் வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 35,000 கன அடியாக அதிகரித்த நீா்வரத்து மாலை நிலவரப்படி விநாடிக்கு 32,000 கன அடியாக தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து அதிகரித்தும், சில இடங்களில் புதிதாக அருவிகளும் தோன்றியுள்ளன. காவிரியில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை 13 ஆவது நாளாக மாவட்டம் நிா்வாகம் நீட்டித்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் வரும் நீரானது செந்நிறமாக மாறியுள்ளது.
சின்னாற்றில் வெள்ள பெருக்கு:
காவிரி ஆற்றின் மற்றொரு கிளை ஆறான சின்னாற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பென்னாகரம், கோவில் பள்ளம், கினிகட்டு ஓடை, கோடுப்பட்டி, தாசம்பட்டி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் சின்னாற்றில் நிகழாண்டில் 2 ஆவது முறையாக மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.