"நம் ஒரே இலக்கு இதுதான்": பிறந்த நாளில் முதல்வர் உறுதி மொழி
தமிழ்நாட்டின் நலனை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் என தொண்டர்கள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, ஹிந்தி திணைப்பை எதிர்ப்போம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.. அணணா வழியில் அயராது உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முழங்கினார்.
பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு கோபாலபுரம், சிஐடி காலனிக்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் மறைந்த முரசொலி செல்வம் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வருகை தந்த முதல்வர் கழக தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார். நீண்ட வரிசையில் நின்று கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், மக்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, "தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம்!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்" என கழக தொண்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.