நான் இல்லையென்றால் டிரம்ப் தோற்றிருப்பார்! எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவளித்த எலான் மஸ்க், அவருக்காக தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார். மேலும், டிரம்ப்பில் குடியரசுக் கட்சிக்கு பெருமளவிலான தேர்தல் நிதியையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவுடன், அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு தலைவராக எலான் மஸ்க்கை டிரம்ப் நியமனம் செய்தார்.
இந்த பதவியை ஏற்ற மஸ்க், அரசின் செலவீனங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில்,டிரம்ப் அரசு தாக்கல் செய்துள்ள வரி மற்றும் சலுகை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த மஸ்க், அரசு நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
முற்றும் மோதல்
அமெரிக்க செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரி மற்றும் சலுகை மசோதாவுக்கு எதிராக மஸ்க் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் கருத்துகள் ஏமாற்றம் அளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் இங்கு அமர்ந்திருப்பவர்களை காட்டிலும் மஸ்க்குக்கு நன்றாக தெரியும், ஆனால் திடீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், நமது பட்ஜெட்டில், பில்லியன் கணக்கான டாலர்களை சேமிப்பதற்கான எளிதான வழி, எலான் மஸ்க் நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், நான் இல்லையென்றால் தேர்தல் டிரம்ப் தோல்விடைந்திருப்பார், அவருக்கு நன்றியுணர்வு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எனது நிறுவனத்தின் ஒப்பந்தத்தை அரசு நிறுத்தினால், டிராகன் விண்கலம் உடனடியாக தனது பணியை நிறுத்தும் எனவும் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப்பும் எலான் மஸ்க்கும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது இருவருக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகின்றது.