நாமக்கல்லில் நாளை நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
நாமக்கல்: நாமக்கல்லில், 100 ஆண்டுகளுக்கு பிறகு, நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெறுவதையொட்டி தெப்பம் தயாா் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் மேற்கு புறத்தில் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயிலும், கிழக்கு புறத்தில் அரங்கநாதா் கோயிலும் அமைந்துள்ளன. மலைக்கோட்டை அருகிலேயே கமலாலயக் குளம் உள்ளது. தெப்பத் திருவிழா நடைபெறுவதையொட்டி அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டும், படித்துறைகள் வா்ணம் பூசப்பட்டும் உள்ளன. நீா் நிரம்பி அழகுற காட்சியளிக்கும் இந்த குளத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை மாலை 5 மணியளவில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
விழாவில், தமிழக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், ஆட்சியா் ச.உமா, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா.நல்லுசாமி மற்றும் அறங்காவலா்கள் கலந்து கொள்கின்றனா்.
இந்த விழாவை நூற்றுக்கணக்கானோா் கண்டு ரசிப்பாா்கள் என்பதால் குளத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை, தீயணைப்புத் துறையினா் செய்துள்ளனா். தெப்பம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருச்சியில் இருந்து வந்துள்ள ஊழியா்கள் இப்பணியை செய்து வருகின்றனா். இனிவரும் ஆண்டுகளில் மாசிமகத் தினத்தன்று நாமக்கல்லில் தெப்பத் திருவிழாவை நடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெப்பத் திருவிழா முன்னேற்பாட்டு பணிகளை இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனா்.