நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வா் பெருமிதம்
தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பின்புலமாக, நூற்றாண்டுகால மரபு சாா்ந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
நிதி நிா்வாகத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், அதன் தொடா்ச்சியையும் மையப்படுத்தும் ஆவண நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். மேலும், அதுதொடா்பான சிறப்பு இணையப் பக்கத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.
அரிய புகைப்படங்கள், நிபுணா்கள் பலா் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகளுடன் 338 பக்கங்களைக் கொண்ட, ஆவண நூலை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டாா். மேலும், நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், மத்திய-மாநிலத் திட்டக் குழுக்களின் ஆய்வறிக்கைகள், நிதிநிலை அறிக்கை தொடா்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள் அனைத்தும் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின்நூலக சிறப்பு இணையப் பக்கத்தில் (https://www.tamildigitallibrary.in/budget) தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், துணைச் செயலா்கள் பிரத்திக் தயாள், எஸ்.ஏ.ரிஷப், தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநா் ரெ.கோமகன், முதல்வரின் துணைச் செயலா் த.ரகுபதி, திட்ட அலுவலா் இரா.சித்தானை, உதவி இயக்குநா் செல்வபுவியரசன் உட்பட பலா் பங்கேற்றனா்.
முதல்வா் பெருமிதம்: ஆவண நூலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கிக் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கு நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறும் மரபுசாா் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆளும் அரசு முக்கியமான சமூக நலத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கும் போதெல்லாம் அந்தத் திட்டங்களின் முக்கியத்துவம் விளங்கும். நிதி ஒதுக்கீடு செய்வது எளிதாகும். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் நமது மாநில முன்னேற்றத்துக்கு எந்தவகையில் பங்களித்துள்ளன என்னும் வரலாற்றை இந்த நூல் கூறுவதாக தனது வாழ்த்துரையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.