ஐபிஎல்: 400+ ரன்கள் ஒரே போட்டியில்.. பெங்களூரு த்ரில் வெற்றி!
பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த ஆழித்தேர்: திரளானோர் பங்கேற்பு!
திருவாரூரில் தியாகராஜ சுவாமிகள் கோயிலின் ஆழித் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாகத் தொடங்கியது. நான்கு வீதிகளிலும் பவனிவந்த ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்டத்தைக் காண திருஞான சம்பந்தரும், நாவுக்கரசரும் இங்கு வந்து தங்கியிருந்ததாக உள்ள குறிப்புகளின் மூலம் 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே திருவாரூரில் தேர்த்திருவிழா நடைபெற்றது என்பதை அறிய முடிகிறது. இந்த ஆழித்தேரோட்டத்தில் தனது பரிவாரங்களுடன் தியாகராஜ சுவாமி எழுந்தருளி பவனி வருவதை காண இந்திரன் முதலானோர் வருவதாக ஐதீகம்.
நிகழாண்டுக்கான ஆழித்தேர் திருவிழா இன்று தொடங்கியது. பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் ஆருரா, தியாகேசா என்ற பக்தி கோஷங்கள் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழத்தனர். மிக பிரம்மாண்ட ஆழித்தேரில் தியாகராஜர் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனுடன் அம்பாள் சண்டிகேசுவரர் தேரும் வடம் பிடிக்கப்பட்டது. முன்னதாக காலை 5.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.
ஆழித்தேரோட்டத்துக்கு 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.