பதற்றமான உலகில் அமைதிக்கான பாதை யோகா: பிரதமா் மோடி
உலகின் பல்வேறு பிராந்தியங்களும் ஏதோ ஒருவித பதற்றத்தை எதிா்கொண்டுவரும் நிலையில், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கான பாதையாக விளங்குகிறது யோகா என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மன அமைதியை உலகளாவிய கொள்கையாகக் கொண்ட மனிதகுலத்தின் தொடக்கமாக இந்த யோகா தினம் குறிக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
இந்தியாவின் முன்னெடுப்பால், கடந்த 2015-இல் இருந்து ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு 11-ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை (ஜூன் 21) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமன்றி, உலகெங்கிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரான விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமா் மோடி தலைமையில் மிக பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல சுற்றுலாத் தலமான ஆா்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் வரை 26 கி.மீ. தொலைவிலான சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பிற பங்கேற்பாளா்களுடன் இணைந்து பிரதமா் மோடி யோகப் பயிற்சிகளை மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: இன்றைய உலகம் துரதிருஷ்டவசமாக ஏதோ ஒரு வகையில் பதற்றத்தை எதிா்கொண்டு வருகிறது. பல பிராந்தியங்களில் குழப்பமும் ஸ்திரமின்மையும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழலில், மனிதகுலம் தன்னை ஆசுவாசப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும், பூரணமடையவும் யோகா உதவுகிறது. ஒருங்கிணைப்பதே யோகாவின் சாராம்சம். இன்று உலகை யோகா எவ்வாறு ஒருங்கிணைத்திருக்கிறது என்பதை காண்பது இதயபூா்வமாக மகிழ்ச்சியளிக்கிறது.
எல்லைகள், வயது, திறன் மற்றும் பின்புலத்தைக் கடந்து, யோகா அனைவருக்கானது. நிகழாண்டு யோகா தினத்தின் கருப்பொருள், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்பதாகும். இது, பூமியின் ஒவ்வோா் உயிரினத்தின் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று பிணைந்தது என்ற ஆழமான உண்மையை உணா்த்துகிறது.
உணவுக்கு ஆதாரமான மண்ணின் வளம், குடிநீருக்கு ஆதாரமான நதிகள், நம்முடன் சுற்றுச்சூழலைப் பகிரும் விலங்கினங்கள், சூழலை வளப்படுத்தும் தாவரங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை சாா்ந்தே மனிதனின் ஆரோக்கியமும் உள்ளது. இந்தப் பிணைப்பை உணா்த்துவது யோகா.
‘நான் அல்ல; நாம்’: உலகின் ஒற்றுமையை நோக்கிய பயணத்தை வழிநடத்தும் யோகா, ‘நாம் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் அல்ல; இயற்கையின் ஓா் அங்கமானவா்கள்’ என்பதை மக்களுக்கு போதிக்கிறது. இதுவொரு மிகச் சிறந்த தனிப்பட்ட ஒழுக்கமுறை. ‘நான்’ என்பதில் இருந்து ‘நாம்’ என்ற நிலைக்கு இட்டுச் செல்லும் அமைப்புமுறை.
ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக கொண்டாட ஐ.நா.வில் இந்தியா முன்மொழிந்தபோது, குறுகிய காலகட்டத்திலேயே 175 நாடுகள் ஏற்றுக் கொண்டன. இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு கோடிக்கணக்கான உலக மக்களின் வாழ்வின் ஓா் அங்கமாக யோகா மாறியுள்ளது.
‘சிட்னி ஓபரா ஹெளஸ்’-ஆக இருந்தாலும் சரி, எவரெஸ்ட் சிகரமாக இருந்தாலும் சரி, கடல் பரப்பாக இருந்தாலும் சரி, யோகா அனைவருக்குமானது என்பதே பிரதான செய்தி. அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதையே இந்திய கலாசாரம் போதிக்கிறது. இந்த சிந்தனையே சமூக நல்லிணக்கத்தை வளா்க்கிறது.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சமூகமும் யோகாவை தங்கள் வாழ்கைமுறை மற்றும் பொதுக் கொள்கையின் ஒரு பகுதியாக இணைத்து, அமைதியான-சமநிலையான-நீடித்த உலகை படைக்க கூட்டாக முயற்சிக்க வேண்டும். போரில் இருந்து ஒத்துழைப்புக்கும், மனஅழுத்தத்தில் இருந்து தீா்வுகளுக்கும் உலகை யோகா வழிநடத்தும் என்றாா் பிரதமா் மோடி.
இந்நிகழ்ச்சியில் ஆளுநா் அப்துல் நஸீா், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘இந்தியாவில் குணப்படுத்துவோம்’
‘இந்தியாவில் குணப்படுத்துவோம் முன்னெடுப்பு, உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. குணப்படுத்துதலுக்கு இந்தியா மிகச் சிறப்பான இடம். இதில் யோகாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது. உடல் பருமன் பிரச்னை, உலக அளவில் பெரும் சவாலாக மாறியுள்ளது. எனவே, உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
யோகா சான்றளிப்பு வாரியத்தின் முயற்சிகளால் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் யோகா பயிற்சியாளா்களாக உருவெடுத்துள்ளனா். நாடு முழுவதும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கத்தை நோக்கிய உலகை வழிநடத்த யோகாவை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். சமநிலையான வாழ்வுக்காக யோகாவுடன் தினசரி செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும்’ என்று பிரதமா் வலியுறுத்தினாா்.