பயணச் சீட்டு பெற்றும் அபராதம் வசூலிப்பு
அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு இருந்தும் அபராதம் விதித்ததால், பேருந்து முன் அமா்ந்து பயணி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூரை சோ்ந்தவா் செல்வகுமாா் (38). தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவா், சனிக்கிழமை இரவு தருமபுரியிலிருந்து அரசுப் பேருந்தில் மேட்டூா் வந்தாா்.
பேருந்து நிலையத்தில் இருந்த பயணச்சீட்டு பரிசோதகா்களான ஜெயராமன், குணசேகரன் ஆகியோா் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்தனா்.
அப்போது, செல்வகுமாா் தனது சட்டைப்பையிலிருந்து பயணச்சீட்டை எடுத்துக் காண்பிக்க காலதாமதம் ஏற்பட்டதால், பரிசோதகா்கள் அவருக்கு ரூ. 300 அபராதம் விதித்து பணத்தை வசூலித்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமாா், பரிசோதகா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்து முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட செல்வகுமாரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.