கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" - விஜய் குறித...
'பரிவாஹன்' பெயரில் வரும் வாட்ஸ்ஆப் லிங்க்குகளைத் திறக்க வேண்டாம்!
பரிவாஹன் என்ற பெயரில் வாட்ஸ்ஆப்பில் வரும் போலி லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணைய மோசடிகள், அதிலும் குறிப்பாக இப்போது மொபைல்போனை குறிவைத்து ஆன்லைன் பண மோசடி அதிகமாகவே நடந்து வருகிறது.
உங்கள் மொபைலில் உள்ள தகவல்களைத் திருடும் பொருட்டு தேவையில்லாத, பாதுகாப்பில்லாத லிங்க்குகளை அனுப்புகிறார்கள், அவற்றை நீங்கள் அழுத்தும்பட்சத்தில் உங்களது தனிப்பட்ட தகவல்களை மோசடி கும்பல் ஹேக் செய்ய வாய்ப்புள்ளது.
அதனால் வாட்ஸ்ஆப் குழுக்கள், இ-மெயிலில் வரும் அதுபோன்ற லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் இணையவழி குற்றப்பிரிவு காவல்துறை ஒரு முக்கிய எச்சரிக்கையை வழங்கியுள்ளது.
போக்குவரத்துத் துறையின் 'பரிவாஹன்' செயலி பெயரில் வரும் போலி லிங்க்குகள், ஏபிகே கோப்புக்ளை திறக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறது.
பரிவாஹன் என்ற பெயரில் போலி லிங்குடன் ஏபிகே(APK) கோப்புகள் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படுகின்றன. பரிவாஹன் செயலியை இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்துகிறது. ஆனால் இது போலியான லிங்க் ஆகும். இதுபோன்ற லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். உங்கள் தரவுகள்/பணம் திருடப்படலாம்.
அதேபோல சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 'நீங்கள் இவ்வளவு தொகை கட்ட வேண்டும், இவ்வளவு தொகை நிலுவையில் உள்ளது' என்றும் செய்திகள் அனுப்பப்படுகின்றன. அவற்றையும் கிளிக் செய்ய வேண்டாம். அந்த எண்ணை உடனடியாக பிளாக் செய்யவும். போக்குவரத்து காவல்துறை அப்படியான விவரங்களை அனுப்பாது என்று சைபர் காவல்துறை கூறியுள்ளது.
அப்படி கிளிக் செய்யும்பட்சத்தில் உங்களின் மொபைலில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு பணம் பறிக்கப்படலாம்.
எப்போதும் அதிகாரப்பூர்வ இ-செல்லான்(e-Challan), பரிவாஹன் இணையதளம் echallan.parivahan.gov.in -ல் மட்டுமே இ-செல்லான்களைச் சரிபார்க்கவும்.
போக்குவரத்துத் துறையின் குறுஞ்செய்திகள், தொலைத்தொடர்பு அமைப்பான டிராயின் அங்கீகரிக்கப்பட்ட "VAAHAN-G" என்பதுடன் முடிவடையும். அதாவது VAAHAN-G என்று குறிப்பிட்டுள்ள எஸ்எம்எஸ்-கள்தான் எங்களது உண்மையான குறுஞ்செய்தி ஆகும். அறிமுகம் இல்லாத ஏபிகே கோப்புகளை பதிவிறக்க வேண்டாம்.
இணையவழி குற்ற புகார்களுக்கு 1930 எண்ணை அழையுங்கள் அல்லது www.cybercrime.gov.in -ல் பதிவு செய்யுங்கள்.
உடனடியாக புகார் செய்யும்பட்சத்தில் பண மோசடி நடக்கும் வாங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.

பரிவாஹன் சேவை
பரிவாஹன் சேவை (Parivahan Sewa) என்பது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் இணையதளம். ஓட்டுநர் உரிமங்கள், வாகனப் பதிவுகள், வாகனம் தொடர்பான பிற சேவைகளை ஆன்லைன் மூலமாகவே பெறலாம்.
அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் mParivahan என்ற செயலி மூலமாக புதிய ஓட்டுநர் உரிமம் பெறுதல், உரிமத்தைப் புதுப்பித்தல், வாகனப் பதிவுகள், போக்குவரத்து விதிமீறல் கட்டணங்கள் செலுத்துவது உள்ளிட்ட சேவைகளைப் பெறுவதுடன் வாகனம் தொடர்பான ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்தில் சேமித்துக்கொள்ளலாம்.

முதலீடு மோசடிகள்
இதேபோல பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகவும் பல போன் அழைப்புகள்/ குறுஞ்செய்திகள் வருகின்றன. அதுகுறித்து கவனத்துடன் இருக்குமாறு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை அண்மை காலமாக எச்சரிக்கை விடுத்து வருகிறது.
வாட்ஸ்ஆப் மூலமாவோ போன் அழைப்புகள் மூலமாக தொடர்புகொள்ளும் மோசடி நிறுவனங்கள் அனுப்பும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை தர வேண்டாம்.
குறிப்பாக இன்ஸ்டா, வாட்ஸ்ஆப்பில் வரும் '100% ரிட்டர்ன்' விளம்பரங்களைப் பார்த்து நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது. இதில் பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். ஏனெனில் சமூக ஊடகங்களில் இவர்கள் போலியான குழுக்களை உருவாக்கி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செபியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா? என நிதி நிறுவனத்தை சரிபார்த்த பிறகு முதலீடு சார்ந்து முடிவெடுப்பது, பணத்தை அனுப்புவதில் ஈடுபட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.