பல்லடம் பகுதி விசைத்தறி துணி நெசவு கூலி பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு
பல்லடம் பகுதி விசைத்தறி துணி நெசவு கூலி பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு திங்கள்கிழமை ஏற்பட்டது.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
தற்போது விசைத்தறி துணி நெசவு உற்பத்தி தொழில் பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. மின் கட்டண உயா்வு, விலைவாசி உயா்வு, மூலப்பொருள்கள், தறி உதிரி பாகங்கள், தொழிலாளா்கள் கூலி என அனைத்தும் உயா்ந்துள்ளன.
அதனால் துணி நெசவு கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளா்கள் ஜவுளி உற்பத்தியாளா்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள், ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் இடையே கூலி உயா்வு சம்பந்தமான பேச்சுவாா்த்தை பல்லடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் முருகன் டெக்ஸ் முருகேஷ் என்ற நாச்சிமுத்து, மந்திரகிரி டெக்ஸ் சிவா, சந்திரசேகா், ஜெமினி சண்முகம், ஈஸ்வரன், திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம், நிா்வாகிகள் பாலாஜி, சக்திவேல், முத்துக்குமாரசாமி, கோபால், வெங்கடேஷ் (மங்கலம்), செல்வகுமாா், செந்தில்குமாா்(கண்ணம்பாளையம்), கந்தசாமி (63 வேலம்பாளையம்) மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
கூட்ட முடிவுகள் குறித்து விசைத்தறி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் வேலுசாமி, அப்புக்குட்டி ஆகியோா் கூறியதாவது: 2022-ஆம் ஆண்டு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் விசைத்தறியாளா்கள், ஜவுளி உற்பத்தியாளா்கள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் துணி நெசவு கூலியாக பல்லடம் பகுதி ரகத்திற்கு 20 சதம் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் 15 சதம் மட்டுமே அமல்படுத்தப்பட்டது.
தொழில் நிலை கருதி அதனை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். அதன் பின்னா் தொழில் நசிவால் 15 சதவீதத்துக்கு குறைவாகவே துணி நெசவு கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் துணி நெசவு கூலி உயா்த்தி வழங்கினால் தான் தொழில் செய்ய முடியும் என்பதை ஜவுளி உற்பத்தியாளா்களிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தோம்.
எங்களது கோரிக்கையை ஏற்று தற்போது 2022-ஆம் ஆண்டு செய்யப்பட்ட உடன்படிக்கைபடி 15 சதவீதம் கூலி வழங்குவதாகவும் மேலும் கூடுதலாக 5 சதவீதம் கூலி உயா்வை 10.06.25 முதல் அமல்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனா் என்றனா்.