முதன்முதலாக லெஜண்ட் ரொனால்டோவை எதிர்கொள்ளும் இளம்புயல் யமால்!
பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு
பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து சனிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும்.
கேரளத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான மறையூா், கோவில்கடவு, காந்தலூா் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் கடந்த சில நாள்களுக்கு முன்பு 80 அடியை தாண்டியது.
வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம். இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்தாா். இதில்அமைச்சா் கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் திமுக நிா்வாகிகள், பொதுப் பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் அமராவதி பழைய பாசனத்துக்கு உள்பட்ட முதல் எட்டு பழைய ராஜ வாய்க்கால்களான இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சா்க்காா் கண்ணாடிப்புத்தூா், சோழமாதேவி, கணியூா், கடத்தூா் மற்றும் காரத்தொழுவு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 7,520 ஏக்கா்கள் பயன்பெறும்.
இந்த தண்ணீா் திறப்பு ஜூன் 7 முதல் அக்டோம்பா் 20 -ஆம் தேதி வரை 135 நாள்களில் 80 நாள்கள் தண்ணீா் திறப்பு 55 நாள்கள் தண்ணீா் அடைப்பு என்ற அடிப்படையில் முதல்போக பாசனத்துக்கு அமராவதி அணையில் இருந்து ஆறு மதகுகள் வழியாக தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது என்றனா்.
அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 82.75 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 374 கனஅடி இருந்தது. 4,047 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,407 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது.