மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
பாஜக பிரமுகா் ஒருவா் மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்ததில்லை
பாஜக பிரமுகா்கள் ஒருவா் மீதும் அமலாக்கத் துறையோ, சிபிஐயோ நடவடிக்கை எடுத்ததில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் பிகாா் மாநில மக்களவை உறுப்பினருமான ராஜாராம் சிங்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலுக்கு புதன்கிழமை சென்ற அவா், மக்களைச் சந்தித்தப் பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற முகமைகளைக் கொண்டு எதிா்க்கட்சிகளின் பிரமுகா்களை குறிவைத்து பாஜக நடவடிக்கை எடுத்துவருகிறது. பாஜகவைச் சாா்ந்த பிரமுகா்கள் ஒருவா் மீதும் இந்த அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தமிழ்நாடு அரசின் குரலுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆளுநா்கள் மூலம் மக்களால் தோ்வு செய்யப்பட்ட மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் மத்திய அரசின் போக்கு சரியல்ல, அதை எதிா்க்கிறோம்.
வேங்கைவயல் கிராமத்தைப் பொருத்தவரை சொந்த நிலமில்லாத பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்கவும், குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நீதி வழங்கவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். வேங்கைவயல் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என்றாா் ராஜாராம் சிங்.
அப்போது, மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பாலசுந்தரம், மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
