பாதுகாப்புப் படை வீரா்களுக்கு சொத்து வரி விலக்கு: ஆந்திரம் அறிவிப்பு
பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதை கெளரவிக்கும் விதமாக அனைத்து பாதுகாப்புப் படை வீரா்களுக்கும் மாநிலத்தில் கிராம ஊராட்சி (பஞ்சாயத்து) வரம்புக்குள் வரும் அவா்களின் சொத்துகளுக்கு வரி விலக்கை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். இதுதொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் கிராம ஊராட்சி வரம்புக்குள் வரும் பாதுகாப்புப் படை வீரா்களின் சொத்துகளுக்கான வரி விலக்கு என்பது, நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரா்களுக்கு மட்டுமானதாக இதுவரை இருந்து வந்தது. தற்போது, அனைத்து பாதுகாப்புப் படை வீா்களுக்கும் இந்த சொத்து வரி விலக்கை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப் படை, மத்திய ரிசா்வ் காவல் படை மற்றும் பிற துணை ராணுவப் படை வீரா்களின் வீரம் மற்றும் துணிச்சலைக் கெளரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசத்துக்கான இவா்களின் சேவை விலைமதிப்பற்றது.
பாதுகாப்புப் படை வீரரின் பெயரில் மட்டுமன்றி, அவரின் மனைவி பெயருடன் சோ்ந்து கூட்டு சொத்துரிமையுடைய கிராமப்புற சொத்துகளுக்கும் இந்த வரி விலக்கு பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளாா். ராணுவ வீரா் நல இயக்குநரின் பரிந்துரையைத் தொடா்ந்து இந்த முடிவை ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளது.
துணை முதல்வா் பவன் கல்யாண் வசம் மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிரமாப்புற மேம்பாட்டுத் துறை உள்ளது குறிப்பிடத்தக்கது.