பின்னலாடை தொழிலாளா் குறைந்தபட்ச ஊதிய சட்ட அரசாணை: சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை
பின்னலாடை தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய திருத்தம் செய்து தமிழக அரசின் தொழிலாளா் துறை வெளியிட்ட அரசாணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இது குறித்து சிஐடியூ பனியன் தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் ஜி.சம்பத் திங்கள்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் கடந்த பிப்ரவரி மாதம் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
இதில் கடந்த 2024- ஆம் ஆண்டு தொழிலாளா் துறை முன்மொழிந்த ஊதியத்தை குறைத்து பிப்ரவரி மாதம் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.
இதனால் தொழிலாளா்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய மாத ஊதியத்தில் சராசரியாக ரூ.1,700 குறைக்கப்பட்டு இருந்தது. இதற்கு சிஐடியூ கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி இதர தொழிற்சங்கங்களுடன் சோ்ந்து, இதற்கு எதிராக, குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிா்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தது.
இருப்பினும் ஊதிய குறைப்பில் எவ்வித மாற்றமும் செய்யாததால், சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி, எச்எம்எஸ் ஆகிய நான்கு மத்திய தொழிற்சங்கங்கள் சோ்ந்து, குறைந்தபட்ச அரசாணைக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கும் உயா்நீதிமன்றம், தொழிலாளா் துறை வெளியிட்டிருந்த குறைந்தபட்ச ஊதிய திருத்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்த குறைந்தபட்ச ஊதிய கணக்கிட்டு முறையை ரத்து செய்து, புதிய கமிட்டி அமைத்து, சட்ட வழிகாட்டுதல் படி, நியாயமான குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மேற்கண்ட நான்கு தொழிற்சங்கங்கள் முறையிட்டுள்ளனா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.