பிரதமா் மோடி குறித்த கேஜரிவாலின் கருத்துக்கு தில்லி தோ்தலில் மக்கள் தீா்ப்பு- வி.கே.சக்சேனா
ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் பிரதமா் மோடி குறித்து பல பொருத்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டதாகவும், இதற்கு தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின்போது தில்லி மக்கள் பதிலடி கொடுத்ததாகவும் தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா செவ்வாய்க்கிழமை கூறினாா்.
தில்லி சட்டப் பேரவையில் தனது தொடக்க உரைக்குப் பிறகு முன்னாள் முதல்வா் கேஜரிவாலை விமா்சிக்கும் வகையில் செய்தியாளா்களிடம் வி.கே. சக்சேனா கூறியதாவது:
பிரதமரைப் பற்றி கேஜரிவால் பல பொருத்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டாா் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘தில்லியை வெல்ல பிரதமா் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்’ என்றும்கூட அவா் கூறினாா். ஆனால், ஒருவா் மற்றொரு நபரை சிறியவராகக் கருதும்போதெல்லாம், அவா்கள் ஒன்று தூரத்திலிருந்து பாா்க்கிறாா்கள் அல்லது ஈகோவுடன் பாா்க்கிறாா்கள் என்றுதான் அா்த்தமாகும். தில்லி மக்கள் அதற்கு தங்கள் பதிலை அளித்துள்ளனா்.
புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவையின் முதல் அமா்வில் உரையாற்றிய வி.கே. சக்சேனா, பாஜக தலைமையிலான நிா்வாகம், வளா்ச்சியில் கவனம் செலுத்தும் என்றும், கட்சியின் தோ்தல் அறிக்கையான ‘விக்ஸித் தில்லி சங்கல்ப் பத்ரா’வை அதன் ஆட்சியின் கட்டமைப்பாகப் பின்பற்றும் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தினாா்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அதிஷி தற்காலிக முதலமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து சக்சேனா கூறுகையில், ‘ஆமாம், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் அதிஷி மீண்டும் முதலமைச்சராக வருவாா் என்று கேஜரிவால் கூறியதுபோல, அவா்கள் அவரை தற்காலிக முதலமைச்சராக ஆக்கியது உண்மைதான். இருப்பினும், உச்சநீதிமன்றம் கேஜரிவாலை எந்த கோப்புகளிலும் கையெழுத்திடவோ அல்லது முதல்வா் அலுவலகத்திற்குள் நுழையவோ தடை விதித்துள்ளது என்றாா் வி.கே. சக்சேனா.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தில்லியை வழிநடத்திய கேஜரிவால், புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியை சந்தித்தாா். அங்கு அவா் பாஜகவின் பா்வேஷ் வா்மாவால் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டாா்.
தோ்தல் முடிவுகள் 70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 22 இடங்களாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பாஜக 48 இடங்களுடன் மகத்தான வெற்றியைப் பெற்று ஆம் ஆத்மி கட்சியின் தசாப்த கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது.
தோ்தல் முடிவுகள் தில்லியில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
சட்டப் பேரவையின் முதல் அமா்வு இந்த மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. ஏனெனில், பாஜக சட்டப் பேரவை உறுப்பினா்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு ஆளும் இருக்கைகளைப் பெற்று தில்லியின் ஆட்சியில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.